Monday, October 17, 2005

உயிரி எரிபொருள் : சாண எரிவாயுவுக்கு பதிலியாக -1

பல ஏழை விவசாயிகள் தம் குடும்பத்தின் அன்றாட சமையலுக்கு வேண்டிய எரிவாயு உற்பத்தி செய்யத்
தேவையான அன்றாட சாணம் கிடைக்கும் நிலையில் இல்லை. மேலும் கால்நடைகள் விற்கப்பட வேண்டிய
தேவைகள் ஏற்படும் போது சாண-எரிவாயுகலன்கள் செயலிழந்து விடுவதும் நாம் காண்கிற ஒரு நிகழ்ச்சிதான்.
எனவே எண்ணெய் விதைகளிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்வதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நமக்கு மிகவும் பழக்கமான, சாகுபடியிலுள்ள, எளிதில் கிடைக்கக் கூடிய 42 எண்ணெய் விதைகள் (மற்றும்
பழக்கொட்டைகளை) இவ்வித (உயிரி-எரிவாயு உற்பத்தி) பயன்பாட்டிற்கு ஏற்றதாக ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளார்கள் [1]. பொதுவாகவே இத்தகைய விதை/கொட்டைகளில் 25 சதவிகித எண்ணெயும் மீதம்
சக்கைத்தன்மையும் உள்ளமையால் ஒரு குறிப்பிட்ட மரத்தையே நெடுக சாகுபடி செய்ய வேண்டிய (monoculture)
அவசியமில்லை. இப்போதைக்கு இவ்விதத்தில் ஆராய்ச்சிக்கு நன்றாக உட்படுத்த பட்டுள்ளவை:
வேப்பங்கொட்டைகள் (Azadirachata indica), புங்கம் (Pongamia pinnata) ஆமணக்கு (Ricinus communis)
காட்டாமணக்கு (Jatropha curcas) ஆகியவை.
ஒரு ஒப்பீட்டைக் காணலாம்: இது பேரா.சுப்பாராவ் et al அளிக்கும் ஆராய்ச்சி முடிவு

  • உள்ளிடும் உலர்ந்த எடைக்கு ஈடாக கிடைக்கும் எரிவாயு கனஅளவு என்று பார்த்தால்:
    சாண எரிவாயு:
    கிலோவுக்கு 0.18 மீ3

    ஆமணக்கு எரிவாயு: 0.4-0.5 மீ3
  • மீத்தேன் வாயு (விழுக்காட்டளவில்)

    சாண எரிவாயு: 55-60 %

    ஆமணக்கு எரிவாயு: 70 %
  • தினசரி உள்ளீட்டளவு-(உலர் எடையளவு):

    சாண எரிவாயு கலனுக்கு : 6-10 கிலோ

    ஆமணக்கு எரிவாயுகலனுக்கு : 1.5 -2.0 கிலோ

[நன்றி:Prof.E.C.Subbarao et al., 'Biogas from Non-edible oil cakes', 'Tree Borne Oil seeds as a source of Energy for Decentralized planning' MNES, edited by Dr.P.Radhakrishna, Government of India]
நைட்ரஜன் இருக்கும் புரதமும் அதிக சதவிகிதத்தில் உள்ளது. உதாரணமாக வேப்பங்கொட்டையில் எண்ணெய் 20 சதவிகிதம் புரதம் 13-35 சதவிகிதம். காட்டாமணக்கில் எண்ணெய் 30-40 சதவிகிதம் புரதம் 38 சதவிகிதம்.கார்பன் எரிவாயுவிலும் கரியமிலவாயுவிலும் வெளியேறிவிடுவதால் பொதுவாக எரிவாயுவுக்கு பின்னர் ஏற்படும் கழிவில் உலர்-எடை அளவில் நைட்ரஜன் அடர்த்தி (concentration) அதிகரிக்கும். இதுவும் சாண-எரிவாயுக்கழிவினைக்
காட்டிலும் அதிகம். எனவே அவை நல்ல உரமாக பயன்படுத்தப்பட முடியும். [வளரும்]