Tuesday, February 06, 2007

வீட்டு மூலிகை தோட்டக் கையேடு

மிக எளிதாக நம்மை சுற்றி கிடைக்கும் மூலிகை செடிகள் குறித்து அவை மூலிகை செடிகள் என்பதையே நாம் அறியாமல் இருக்கிறோம். அவற்றுள் சிலவற்றையே பாட்டி கை வைத்தியம் வழியாக நாம் அறிந்திருக்கிறோம். எனவே தமிழ் மக்கள் வீடுகளில் நிற்கும் இத்தகைய 14 மூலிகை செடிகளை கண்டறிந்து அவற்றின் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகளையும் கொண்டு ஒரு கையேட்டினை தந்துள்ளது விவேகானந்த கேந்திரம். மனையடி மூலிகை மருத்துவம் எனும் இக்கையேட்டில் நெல்லை சீமையின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் கணபதி அவர்கள் இந்த 14 மூலிகை செடிகளின் விவரங்களை அளித்துள்ளார்கள். இம்மூலிகைகளை வீடுகளில் மட்டுமன்றி பொது இடங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களில் வளர்க்க வேண்டும் என்ற நோக்குடனேயே இக்கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எவரும் எளிய மருந்துகளை தயார் செய்ய இயலும். இம்மூலிகைகள் அதிக இடம் , அதிக பொருட்செலவு, அதிக நீர் வசதி ஆகியவை கேட்காதவை ஆகும். பாரதம் ஆரோக்கியமான தேசமாக உருவாக இந்த கையேடு பயனளிக்கும் என நம்பலாம்.

இக்கையேட்டில் 14 மூலிகை செடிகளின் கறுப்பு-வெள்ளை படங்களை அளித்துள்ளார்கள். அத்துடன் மூலிகையின்

  • வழங்கு பெயர்,
  • அறிவியல் பெயர்
  • மருந்துக்கு உதவும் பாகங்கள்
  • கட்டுப்படுத்தும் நோய்கள்
  • சுத்தி செய்தல்
  • பயன்படும் முறை
  • வளர்க்கும் விதம்

ஆகியவை ஒவ்வொன்றிற்கும் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.


உதாரணமாக மாதுளையை எடுத்துக்கொள்வோம்.


  • Punica granatum
  • இனம் : செடி
  • மருந்துக்கு உதவும் பாகங்கள்: பழம், பழவோடு, பிஞ்சு
  • கட்டுப்படுத்தும் நோய்கள்: பேதி, இரத்தக் கிராணி, பாண்டு (வெளுப்பு) மேகநோய் ஆகிய பிணிகள் நீங்கி உடற்பலம் உண்டாகும்.
  • பயன்படுத்தும் விதம்:
    • 1. 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.
    • 2. பழச்சாற்றை தேவைக்கேற்ப பருகிவர பாண்டு நீங்கி உடற்பலம் தரும்.
    • 3. இதன் பழஓட்டை நிழலில் காயவைத்து பொடியாக்கி 5-10 கிராம் வீதம் 3 வேளை பொடித்துண்ண பேதி வயிற்றுப்புண் நீங்கும்.
    • 4. மாதுளம் பிஞ்சு தளிர் இவைகளை 20 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து பாலில் மூன்று வேளை வீதம் உண்டுவர மேகநோய், வெள்ளைப்போக்கு நிற்கும்.
    • 5. வாய்ப்புண் குணமாக இதன் தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன குணமாகும்.
    • 6. இதன் பழ-ஓட்டைப் பொடித்து அதனுடன் வெந்தயம் பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம் வரை தினமும் 3 வேளை வீதம் உண்டுவர மேகநோய், பாண்டு அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகியவை குணமாகும்.

  • வளர்க்கும் விதம்: விதை, குச்சி.


இவ்விதமாக கீழ்கண்ட 14 மூலிகைச்செடிகள் குறித்து கூறப்பட்டுள்ளது:


  • 1. சோற்றுக்கற்றாழை : Aloe vera


  • 2. நெல்லி : Emblica officinalis


  • 3. செம்பரத்தை : Hibiscus rosasinensis


  • 4. துளசி : Ocimum sanctum


  • 5.தூதுவளை:Solanum trilobatum


  • 6.கற்பூரவள்ளி: Plectranthus ambonicus


  • 7.நிலவேம்பு: Andrographis paniculata


  • 8.மாதுளை:Punica granatum


  • 9.மஞ்சள் கரிசாலை: Wedelia calendulacea


  • 10. ஆடாதோடை: Adhatoda vasica


  • 11. பப்பாளி: Carrica papaya


  • 12. முருங்கை: Moringa indica (Moringa oleifera)


  • 13. நொச்சி : Vitex negundo


  • 14. மணத்தக்காளி : Solanum nigrum


மனையடி மூலிகை மருத்துவம்




  • விவேகானந்த கேந்திரம் - நார்டெப்
  • கன்னியாகுமரி - 629702
  • பக்கங்கள்: 28

3 comments:

எழில் said...

Excellant post. Thanks for the information.

Also could you please note about Kila Nelli, poosani, thulasi, thiruneetru pachilai and other herbs and plants?

Thanks again
Ezhil

அரவிந்தன் நீலகண்டன் said...

shall do it in coming posts. Insha Time :)
Thank you Ezhil for coming and the comments.

Gurusamy Thangavel said...

//நெல்லை சீமையின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் கணபதி அவர்கள் //

இவர் கல்லூரியில் எனது சீனியர், மேலும் நல்ல நண்பர்.